Face Book LIKE

Tuesday, June 6, 2017

உலகின் மூத்தகுடி உழவன்

(Photo Credit : Times of India)

உணவும் உடுக்கையும் 
இழந்த உழவனின் 
இடுக்கண் களைவ தாரிங்கே ? 

உண்பதோர் நாழி 

அளப்பதற் காளில்லை

உடுக்கும் நாலுமுழம் 

கிடைக்க வழியில்லை

மயிர்போயின் வாழாக் 

கவரிமான் போலிங்கு 
வாழ்ந்தும் ஆயிற்று ! 

சுவாசிக்கும் காற்றுக்கும் 

விலை கேட்கும் காலம்வரும் ! 
வீதியில் விழுந்து 
புரண்டலையும் நேரம் வரும்!

பிச்சையோ நாம் கேட்கின்றோம்?  

பிழைக்க வழி யாமறிவோம் ! 
பிழைத்தும்மைப் பேணவும் 
யாமறிவோம்!   

வீழ்ந்துலகைக் காக்கின்ற 
மழைத்துளியை 
வீணாக்கி விடவேண்டாம் ! 
விவசாயம் செய்வதற்கு 
வகை செய்தால்

அதுபோதும்! 

வீதிவரை வரும் தென்றல் 

வீட்டினுள்ளும்  நுழைந்தெம்மை  
நலன் விசாரிக்கும் 
நாள்தோறும்! 

விவசாயம் செய்திடவே 
வகை செய்து தாரும் !

விவேகம்  அதுவே !  

விளக்கமும் அதுவேதான் !  

சுழன்றும்  ஏர்ப் பின்னதே 
உலகென்பார்!  
சுழன்று   கொண்டேதான் 
இருக்கின்றான் உழவன்  !
துன்பத்தில்   
உழன்று  கொண்டும்தான் !


உணவின்றி நாட்டின் 

உழவன் மரிப்பதுவோ ?
உணவை அளிக்கின்ற அவனன்றோ 
உலகின் மூத்தகுடி ! 
உணர்வீர்  அவன் பெருமை! 
உணவின்றி அவன்மரித்தால் 
உலகே மரிப்பதுபோல் ! 
அன்னை மனம் நொந்தால் 
அவர்மக்கள் வாழ்வாரோ 
வளம்பெற்று ?


--கி.பாலாஜி

10.04.2017

மாலை 4.15

No comments: